தெளிந்த மனதோடு பிரசாத்தின் வீட்டிற்கு வந்தான். அவனது திடீர் வருகையை எதிர்பார்க்காத தனம் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நின்றார்.
“என்ன சித்தி உள்ளே வான்னு கூப்பிட மாட்டீங்களா?…” என கேட்டு கொண்டே உள்ளே நுழைந்தால் அங்கே பிரசாத் அமர்ந்திருந்தான்.
ஒரு கணம் துணுக்குற்றாலும் சமாளித்துக்கொண்டு தனத்தை பார்த்து இயல்பாகவே சிரித்தான். அதில் தனமும் சுதாரித்துவிட்டார்.
“வா பிரபா. வரேன்னு ஒண்ணுமே சொல்லலையே?…” என கூறிக்கொண்டே பிரசாத்தை பார்த்து வெளியே போகுமாறு சைகை செய்யவும் அதில் கடுப்பானவன் இன்னும் நன்றாக சாய்ந்து சட்டமாக அமர்ந்துகொண்டான்.
இவனை வைத்துக்கொண்டு உதயாவிடம் எப்படி பேச முடியும் என்று இருதலை கொல்லி எறும்பாக தவித்தார். அவரின் அவஸ்தையை புரிந்த உதயா அமைதி காக்க பிரசாத் நக்கலாக சிரித்தான்.
“உட்காருங்க சித்தி. நான் பேச வந்ததை பேசிட்டு கிளம்பனும். என் மனைவி எனக்காக காத்திருப்பா…” என்று அழுத்தமாக சொல்லி கொண்டே பிரசாத்தை பார்த்தான். அவனோ நீ என்னவேணும்னாலும் சொல்லிக்கோ என்பது போல கேட்டும் கேட்காத பாவனையில் மொபைலில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான்.
“இன்னொரு நாள் பேசிக்கலாமே பிரபா. இப்போ நீ கிளம்பேன்…” என்று தயக்கமாக சொல்லவும்,
“என்னைக்கா இருந்தாலும் பேச வேண்டியதை பேசிடலாமே? நீங்க இப்டி பக்கத்துல உட்காருங்க சித்தி…” என்று தன்னருகில் அமரவைத்து விட்டு பிரசாத்தை பார்த்தான்.
அவன் முகத்தில் முத்துமுத்தாக வியர்வை பூக்கள் பூத்திருந்தது. ஆனாலும் எதையும் வெளிக்காட்டாமல் அமர்ந்தவாக்கிலேயே அசையாமல் இருந்தான்.
“என்னை முதல்ல மன்னிச்சுகோங்க சித்தி…” என்றவனை புரியாமல் பார்த்தவர்,
“ஏன் பிரபா? நீ எதுக்காக மன்னிப்பு கேட்கற?…” என பதறிவிட்டார்.
“உங்களுக்கு குடுத்த வாக்கை என்னால காப்பாத்த முடியாது. அதுக்காக தான் இந்த மன்னிப்பு…” என்று சிறு வேதனை கலந்த குரலில் கூறவும் அதிர்ந்த தனம்,
“அப்போ நடந்ததை எனக்கு சொல்ல மாட்டியா பிரபா?…” என்று சற்று கோபமாக கேட்டதும் இல்லை என்று தலையசைத்தான். அவனது மறுப்பில் அனைத்து கோவமும் பிரசாத்தின் மேல் பாய்ந்தது.
உதயாவின் பேச்சில் இனி தன் அன்னைக்கு அருவியூர் விஷயம் எதுவும் தெரியப்போவதில்லை என்ற நிம்மதி ஒரு நொடி தான் ஒரு நொடிக்கும் குறைவாக அவன் முகத்தில் வந்து சென்றதை இருவருமே கவனித்துவிட்டனர்.
“என்னடா பண்ணித்தொலச்ச? இப்படி பாவத்துக்கு மேல பாவம் பண்ணி என்னை ஒரேடியா சாகடிக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?…” என அவனை பிடித்து உலுக்கியும் அவனிடமிருந்து எந்தவிதமான பிரதிபலிப்பும் இல்லை. உதயாதான் அவரை தடுத்தான்.
“ப்ளீஸ் சித்தி. அவனை விடுங்க. முடிஞ்சு போனதை பத்தி இனியும் பேசி பிரயோஜனமில்லை. இனியும் அதை பத்தி நினைக்காம இப்டியே விட்ருங்க. அந்த விஷயம் எங்களோடவே புதைஞ்சு போகட்டும். புரிஞ்சுக்கோங்க சித்தி…” என கைக்கூப்பி வணங்கியவனிடம் என்ன பேச முடியும் என்று தன்னை அடக்கிக்கொண்டார்.
“புரியுது பிரபா. நந்தினிக்காகதான் இதை நீ என்கிட்டே சொல்லாம மறைக்கிறன்னு எனக்கு நல்லாவே புரியுது. இனிமே எதுவுமே கேட்க மாட்டேன். நல்லா இருங்க. நீ கிளம்பு…” என சுரத்தில்லாத குரலில் கூறியவரை பார்த்து செய்வதறியாமல் நின்றான்.
அவனின் தயக்கத்தை உணர்ந்தவர் முகத்தை முந்தானையால் அழுந்த துடைத்துவிட்டு, “எனக்கு கோவமெல்லாம் எதுவுமே இல்லை பிரபா. அதனால நீ வருத்தபடாம போய்ட்டு வா. முடிஞ்சா நந்தினிக்கு விருப்பம் இருந்தா இங்க கூட்டிட்டு வா. ஒருநிமிஷம் இதோ வரேன்…” என்றவர் போன வேகத்தில் திரும்பி வந்தார் கைகளில் இரு பைகளோடு. அதை உதயாவின் கைகளில் திணித்தவர்,
“நீ போனதுமே வீட்ல என்ன விஷயம் எதுக்காக போனேன்னு கேட்பாங்க. நீ என்னனு பதில் சொல்லுவ? அதனால இதை வாங்க தான் நான் உன்னை வரசொன்னேன்னு சொல்லிடு. நந்தினிக்கு இதை நான் குடுத்ததா குடுத்துருப்பா. அப்புறம்…” என கூறிவிட்டு பிரசாத்தை பார்த்தவர் மீண்டும் உதயாவின் புறம் திரும்பி,
“அவளுக்கு என் மேல கோவமெல்லாம் இல்லயே? இவனை பெத்ததுக்கு. நந்தினிக்கிட்ட சொல்லுப்பா. பாவம் அந்த பொண்ணு இவனால என்னவெல்லாம் கஷ்டபட்டுச்சோ? என்னால முடிந்த ஒண்ணே ஒண்ணு. இந்த பாவிக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்…” என குறுகிப்போய் மன்னிப்பை கேட்டதும் உதயா உடைந்துவிட்டான்.
வீட்டிலுள்ளவர்கள் கேட்கும் கேள்விக்கு தக்க பதிலை தேடிக்கொடுத்து சமயோசிதமாக செயல்பட்ட சித்தியை மெச்சிக்கொண்ட மனதை அடுத்த நொடி அவரது மன்னிப்பால் துடிக்க வைத்தார்.
“சித்தி…” என்ற கதறலோடு அணைத்துக்கொண்டவன், “ஏன் சித்தி இப்டியெல்லாம் பேசறீங்க? மன்னிப்பு கேட்டு வேதனைப்படுத்தாதீங்க சித்தி. ப்ளீஸ்…” எனவும் உதயாவின் கண்களை துடைத்தவர்,
“நீ கிளம்பு பிரபா…” என்று உறுதியான குரலில் கூறவும் வேறு வழியின்றி தலைகவிழ்ந்து அமர்ந்திருந்த பிரசாத்தை ஒரு முறை வலியோடு பார்த்துவிட்டு அங்கிருந்த புறப்பட்டான்.
உதயா கிளம்பியதும் பிரசாத்தை முறைத்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார் தனம். அவர் அவ்விடம் விட்டு அகன்றதும் அதுவரை இறுகிப்போய் அமர்ந்திருந்த பிரசாத் தன் தாயவள் சென்ற திசையை நிமிர்ந்து பார்த்தான். அவனின் சிவந்த விழிகளில் கண்ணீர் வடிந்தபடியே இருந்தது.
எல்லாம் தன்னால் தானே. பெற்றவள் மன்னிப்பு கேட்கும் நிலைக்கு தானே தள்ளிவிட்டோமோ என்று நொறுங்கிப்போய்விட்டான்.
இனி இவ்வுலகில் தனக்கு என்ன இருக்கிறது என வெறுத்துப்போய் இருந்தவன் மூளை இன்னும் ஒரு வேலை பாக்கி இருக்கிறதே, அதை நல்லபடியாக முடிக்க வேண்டுமே என உத்தரவிட தன்னை நிலைபடுத்தி கண்ணீரை துடைத்துகொண்டான். அவன் செய்ய வேண்டியதை நினைத்ததும் முகம் கல்லை விட கடினமாக மாறிவிட்டது.
தன் இல்லத்தை அடைந்த உதயா அப்பாவும், மாமாவும் வந்துவிட்டதை பார்த்தவன் ஹாலில் அவர்களோடே அமர்ந்துவிட்டான். நந்தினியை அழைத்து தனம் கொடுத்த கவரை கொடுத்தவன் சுதர்சனத்திடம் பேச ஆரம்பித்தான்.
அவனிடமிருந்து கவரை வாங்கிய நந்தினி நேராக பாக்கியத்திடம் காண்பிக்க சென்றாள். நாச்சியும் அங்கேயே இருக்க அனைவரிடமும் காண்பித்துவிட்டு தன் அறைக்கு அதை வைத்துவிட்டு வர மாடிக்கு சென்றாள்.
“ஏய் நில்லு…” என்ற அதட்டலான குரலில் திரும்பிய நந்தினி அங்கே வேணி நின்று கொண்டிருந்ததை ஒருவித அலட்சியத்துடன் பார்த்து விட்டு திரும்ப தன் அறையை நோக்கி சென்றாள்.
அவளின் பின்னாலே வேக நடையோடு சென்றவர் நந்தினி தன் அறையை எட்டுமுன்னே அவளை மறித்து நின்று, “ கூப்பிட்டா என்னனு கேட்கமாட்டியோ? எவ்வளோ திமிர் உனக்கு?…” என்று மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க எகிறினார்.
கைகளிரண்டையும் மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டவள் வேணியை முறைத்துக்கொண்டே, “என்ன?…” என்று கேட்டாள் ஒற்றை வார்த்தையில்.
“என்ன, என்ன? கொஞ்சமாவது மரியாதை இருக்கா உனக்கு? அதை விடு. கைல என்ன காண்பி. அதை பார்க்கணும்…” என அதிகாரமாக கேட்கவும் அதை கண்டுகொள்ளாமல் அவரை சுற்றிக்கொண்டு சென்றாள் நந்தினி.
அவளின் கையை பிடித்து நிறுத்தியவர், “நான் கேட்டும் காண்பிக்காம போற உன்னை…” என பல்லைக்கடிக்க,
“இப்போ என்ன? அதை நீங்க பார்த்தே ஆகணுமா? என்னால காட்ட முடியாது. உங்களால முடிஞ்சதை பார்த்துக்கோங்க…” என்று வெடுவெடுத்தவள்,
“திரும்ப எனக்கிட்ட பிரச்சனை பண்ணனும்னு நினச்சீங்க, விளைவு விபரீதமா இருக்கும். பார்த்து நடந்துக்கோங்க…” என எச்சரித்தாள்.
“ஏய்!!! புள்ளப்பூச்சி, உன்னால என்ன பண்ண முடியும் என்னை?…” எங்கே உதயா வந்துவிடுவானோ என உள்ளுக்குள் நடுங்கினாலும் வெளியில் காட்டிகொள்ளாமல் வீம்பாகவே கேட்டார்.
கேவலமான ஒரு பார்வையை பார்த்து விட்டு, “சொல்லிட்டு செஞ்சா அதுல த்ரில் இருக்காது. இனிமே சொல்லாம தான் செய்வேன் தினம் ஒண்ணா. வெய்ட் பண்ணுங்க…” என கூறிவிட்டு தன் அறைக்குள் நுழைந்தவள் தடாரென கதவை அடைத்தாள். அது வேணியின் முகத்தில் அறைந்தது போல ஆனதும் அவர் கொதித்துப்போய் விட்டார்.
ஆளாளுக்கு ஏற்படுத்திய உதாசீனம் வேணியின் நிதானத்தை இழக்கச்செய்தது. பிரசாத் சொன்னது போல கெளரி கல்யாணம் முடியட்டும். அதன் பின்னால் யாரோட துணையும் தனக்கு தேவையில்லை. என்று முடிவெடுத்து மூடிய கதவை வெறித்து பார்த்துவிட்டு சென்றார்.
அறைக்குள் நுழைந்த நந்தினி, “நல்லா வேணும் என் உதயை கஷ்டபடுத்தி இந்த குடும்பத்தை வேதனை படுத்தினாங்கள்ள. நல்லா வேணும் அவங்களுக்கு. இனி தினமும் நான் என்ன செய்வேனோனு பதறட்டும். அதான் சரியான தண்டனை…” என சந்தோஷமாக எண்ணிக்கொண்டாள்.
அவளின் ஆயுளுக்கும் மறக்கமுடியாத ஒன்றை வேணி செய்ய போகிறார் என்று அப்போது தெரியாமல் போய்விட்டது. அவரது கண்களில் தெரிந்த வெறுப்பை மட்டுமே பார்த்தவள் அந்த வெறுப்பின் பின்னால் உறைந்திருந்த குரூரத்தையும், கொலைவெறியையும் கவனிக்க தவறிவிட்டாள்.
அதை அவள் அனுபவிக்கும் போது காப்பாற்ற யாரும் இருக்க போவதில்லையே. தன் கணவனின் காதல் கூட காப்பாற்ற வராமல் தான் துடிதுடிக்க போவதை உணராமல் நிரந்தரமில்லா தற்காலிக சந்தோஷத்தில் திளைத்திருந்தாள்.