“அப்போ அப்டி தோணுச்சு. இப்போ இப்படி தோணுது விடேன்!…” என்றான் சலிப்பாக யார்கிட்டயிருந்து தப்பிச்சாலும் இந்த மனசாட்சி கேள்வி மேல கேள்வி கேட்டு உயிரை வாங்குதே என்ற கோவத்தில்.
“அப்டிலாம் விடமுடியாது. இதுக்கு என்ன அர்த்தம்?…” எனவும்,
“உன் கிட்ட சொல்றதுக்கு என்ன? என்னால அவளை யாருக்கும் விட்டுக்குடுக்க முடியலையோன்னு தோணுது!…”
“அதனாலதான் நானே அவளை அவளோட பெத்தவங்களோட அனுப்பிவச்சாலும் எப்படி இருக்கா அங்க என்ன நிலவரம்னு தெரிஞ்சுக்க அப்பப்போ ஆள் அனுப்பி விசாரிச்சுட்டே இருந்தேன்!…”
“அருவியூர்ல நடந்த சம்பவத்துக்கு நானும் ஒரு காரணம் தானேன்னு எனக்கு நானே சமாதானபடுத்திகிட்டேன். பின்தொடர்ந்து விசாரிச்சு வச்சது கூட அவ நல்லதுக்காகத்தான் செய்யறோம்.அது மனிதாபிமானம் மட்டும் தான், அதுக்கு மேல ஒண்ணுமே இல்லைன்னு எனக்கு நானே உருபோட்டுகிட்டேன்!…”
“ஆனா திரும்ப அவளுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறதை தெரிஞ்சதும் ஏதோ ஒரு ஏமாற்றம். ஆனாலும் மாப்பிள்ளை வீட்டை பத்தி விசாரிச்சிட்டு மத்ததை யோசிக்கலாம்னு பார்த்தா அது அந்த ராஸ்கலோட வேலைன்னு தெரிஞ்சதும் என்ன பன்றதுனே தெரியலை. அதுக்கப்புறம் யோசிக்க என்ன இருக்குன்னு கிளம்பி நேர மண்டபத்துக்கு போயிட்டேன்!…”
“எவ்வளவோ சொன்னேன் கேட்டாரா என் மாமனாரு!…” என்றான் மாமனாரில் அதிகமான அழுத்தம் கொடுத்து,
மடைதிறந்த வெள்ளமாக தன உணர்வுகளை மனசாட்சியிடம் கொட்டிகொண்டிருந்தான்.
“என்னோட உரிமை அவ. என்னால நந்தினியை விட்டுட முடியாது. ஆனா இப்போவும் இது காதலானா ம்ஹூம் தெரியலையே?…அவ என்னோட மனைவி…அவ மேல ஒரு ஈர்ப்பும் பாசமும் இருக்கு. இல்லைன்னு சொல்லவே மாட்டேன். அது காதலா சீக்கிரமே மாறும்!…” என முடித்தவன்,
“அவளுக்கு எப்போ பல்ப் எரிய போகுதோ? ஹ்ஹம்…” என பெருமூச்சு விட்டவனை பார்த்தவாறே இருந்த மனசாட்சியிடம்,
“பல்ப் எரியலைனா என்ன? ஒரு காமாட்சி விளக்கு , இல்லைனா சிம்னி விளக்காவது கொளுத்தி எரியவச்சிடுவோம்ல!…”என்றான் குறும்பாக.
இப்போது உதயாவின் மனதின் சஞ்சலங்கள் அனைத்தும் விடைபெற்று தெளிவாக இருந்தது.
நந்தினி கதவை திறக்கும் அரவம் கேட்டு மனசாட்சியை உள்ளே தள்ளி மனதை பூட்டினான்.
“வா, இந்தா இந்த பாலை குடி!…” என குடுத்துவிட்டு அவள் குடித்து முடிக்கவும்,
“இப்போ கேளு!…” என அவளை பேச தூண்டினான்.
“இங்க எப்படி எல்லா ஏற்பாடும் பண்ணினாங்க?..”
“என்ன ஏற்பாடு?…” என உண்மையாகவே புரியாமல் கேட்டவனிடம்,
“நம்ம கல்யாணத்தை எல்லோருமே ஏத்துக்கிட்டாங்க, அதுமட்டுமில்லாம வரவேற்புக்கும் ஏற்பாடு பண்ணி வச்சிருக்காங்க எனக்கு ட்ரெஸ் முதற்கொண்டு இதெல்லாம் எப்படி?…உங்க மேல யாருக்குமே கோவமில்லையா?…” என மூச்சுவிடாமல் கடகடவென கேள்வி கேட்டவளை பார்த்து புன்னகைத்தவன்,
“நமக்கு கல்யாணமானது எப்போவோ வீட்ல தெரியும். அதாவது, முதல்ல நடந்ததுல, அருவியூர்ல வச்சு, அந்த கல்யாணம். அன்னைக்கே சொல்லிட்டேன். அதுமட்டுமில்லாம சொல்லவேண்டிய கட்டாயம் வேற. நடந்தது தெரியவும் எப்போ நீ இங்க வரப்போறே எல்லோருமே காத்துகிட்டு இருந்தாங்க!…”
“எனக்காகவா? எப்படி?..” என விழிகள் விரிய கேட்டாள் ஆர்வமாக.
“ஒரே நாள்ல எல்லாத்தையும் சொல்லிட்டா கதை முடிஞ்சதுமே?…” – சிரித்தபடி.
“என்ன சொல்றீங்க?…” என வினவவும்,
“இன்னைக்கு காலையில நான் மண்டபத்துக்கு வரவுமே மதி போன் பண்ணி வீட்ல எல்லோர்கிட்டையும் சொல்லிட்டான். அதுமட்டுமில்லை அங்க பிரச்சனை பெருசாகவும் அங்க நடந்த எல்லாத்தையுமே சொல்லி போட்டோவையும் எடுத்து வீட்டுக்கு மெசேஜ் அனுப்பிட்டான் கெளரிக்கு!…” என அவன் சொல்லிகொண்டே போக நந்தினியின் மனம் காலையில் நடந்தவற்றை சுற்றிகொண்டிருந்தது.
பெற்றோரை நினைத்து கலங்க ஆரம்பித்தது. அன்றைய நிகழ்வு அவளது மனதில் ஆறாவடுவாகிவிட்டதை உணராமல் போனது உதயாவின் துரதிஷ்டம் தானோ?. அடக்கிவைக்கப்பட்ட குமுறல் ஆக்ரோஷமாக வெளிப்படும் சூழ்நிலையில் அதை எவ்வாறு சரிசெய்யபோகிறான்?.
நந்தினியின் முகமாற்றத்தை கவனியாமல் தன் போக்கில் நடந்தவற்றை சொல்லிகொண்டிருந்தான். அவன் சொல்ல சொல்ல பதில் ஏதும் பேசாமல் அமைதியாக கேட்டுகொண்டே வந்தாள். அவளது அமைதியை பார்த்தவன் என்னவாகிற்று என்று வினவ, நொடியில் தன்னை சுதாரித்துகொண்டு ஒன்றுமில்லை என தலையாட்டி மேலே சொல்லுமாறு தூண்டினாள். உதயாவும் உற்சாகத்தோடு,
“இங்க எல்லோருக்குமே தெரியும், அப்போவே வெளியூர் சொந்தகாரங்களுக்கு எல்லாம் போன்ல சொல்லி வரவச்சுட்டாங்க!… எல்லாம் கிழவி வேலை!…” என்றான் பெருமிதமாக.
“இங்க ஊர்ல பாதிக்கும் மேல சொந்தகாரங்க & ப்ரெண்ட்ஸ் தான், அதனாலதான் எல்லாத்தையும் சேர்ந்து நாம வரதுக்குள்ள முடிச்சுட்டாங்க…இந்த மதி வேற அப்பப்போ எங்க இருக்கோம், வர எவ்வளோ நேரமிருக்குன்னு வரைக்கும் தகவல் குடுத்துட்டே இருந்தானே?…”
“அதுமட்டுமில்லாம இப்போதைக்கு அவசரத்துக்கு உனக்கான ட்ரெஸ் எல்லாம் என் சித்தியும் கெளரியும் தான் போய் வாங்கிட்டு வந்தாங்க!…”
“சித்திக்கு ஸ்டிச்சிங் நல்லா தெரியும், அதான் உனக்கு புடவைக்கான மேட்சிங் ரெடி பண்ணிட்டாங்க!…”
“நீயும் கெளரியும் கிட்டத்தட்ட ஒரே போலதானே இருக்கீங்க? அதனால பிரச்சனை இல்லை உனக்கு ஏதும் சேஞ் பண்ணிக்கணும்னா நீ நாளைக்கு சித்திகிட்ட சொல்லி பண்ணிக்கோ, புரிஞ்சதா?…”
“போதுமா விளக்கம்? இல்லை இன்னும் வேணுமா?….”
அவன் பேசபேச இப்படியும் செய்வாங்களா? இவங்க எனக்கு சொந்தங்களா கிடைக்க தான் தகுதியானவள்தானா? இந்த எண்ணம் தலைதூக்கியதும் அவனிடம் கேட்டே விட்டாள்.
“தகுதியா? தகுதின்னா என்னனு நீ நினைக்க?…”
நந்தினி, “இதுக்கு என்ன பதில் சொல்றது எனக்கு தெரியலையே?…” எனவும்,
“இல்லை நீதான கேட்ட, நீதான் சொல்லேன்!…”என்றான் அவளது எண்ணமென்ன என தெரிந்துகொள்ள,
“நீங்க நல்லா படிச்சிருக்கீங்க, அப்புறம்…” என அந்த அறையை கண்களால் அளந்தபடி அதற்குமேல் பேசமுடியாம தொண்டையில் வார்த்தைகள் சிக்கிக்கொள்ள, அதை யூகித்தவனாக,
“பணத்தையும், படிப்பையும், வசதியையும் வைத்து யாரையுமே எடை போடாதே, பணம் என்பது பெருமை படகூடிய விஷயமே இல்லை, வசதியில்லாத வீட்ல பிறந்தா அதுக்காக அவமானமா என்ன?….புரியுதா?…”
“ம்ம்!..” என தலையாட்டியவளை பார்த்து,
“இப்போதைக்கு உனக்கு புரியிற மாதிரி ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். அன்பு மட்டுமே தகுதியை நிர்ணயிக்கும். மத்தவங்க நம்ம மேல காட்டுற அன்புக்கு நாம தகுதியா இருந்தா போதும்!…”
“இந்த வசதியை பார்த்து நாம ரொம்ப பணக்காரங்கன்னு நினைச்சிடாதே புரியுதா?…” எனவும்,
“எனக்கு நீங்க சொல்றது புரியலைங்க!…”
“ப்ச், சில விஷயங்கள் நீயுமே தெரிஞ்சிக்கிறது நல்லது!…”
“நாம சம்பாதிக்கிறது நமக்காக மட்டுமில்லை. நமக்குன்னு சில கமிட்மெண்ட்ஸ் இருக்கு நந்து. நாம நிறைய வசதியில்லாத குழந்தைகளையும் ஆதரவற்ற குழந்தைகளையும் படிக்க வச்சிட்டு இருக்கோம்!..” என நாம் என்று கூறி அவளையும் அதில் இணைத்துகொண்டான்.
“இப்போ இந்த குடும்பத்தில் நீயும் ஒருத்தி. எனக்கு பக்கபலமா இனி நீ இருக்கணும். உன்னோட ஒத்துழைப்பும் இனி எல்லா விஷயத்திலும் தேவை. போக போக உனக்கே புரியும் பாட்டியும் அம்மாவும் உனக்கு துணையா இருப்பாங்க, சீக்கிரமே எல்லாத்தையும் தெரிஞ்சுப்ப!..” என்று முடிக்க,
அவனையே பிரமிப்பாக பார்த்திருந்தவளை சொடுக்குபோட்டு அழைத்தவன், “என்ன இப்படி உட்கார்ந்துட்டே தூங்க போறியா?…” எனவும்,
“ம்ம் தூங்கனும்….” என இழுத்தவளை,
“எதையாச்சும் அபத்தமா பேசி கோவத்தை கிளப்பிடாத, அப்புறம் நான் மனுஷனா இருக்கமாட்டேன். பேசாம வந்து தூங்கு!….” என மிரட்டிவிட்டு கட்டிலின் ஒருபுறம் படுத்துவிட்டான்.
மறுபுறம் வந்து படுத்தவளிடத்தில் பெற்றோரின் நினைவு வந்து ஒட்டிகொண்டது.
தூக்கம் வராமல் அழுதபடியே படுத்திருந்தவளை, “இப்போ ஏன் இந்த அழுகை?…” என உதயா கேட்டதும் திடுக்கிட்டு திரும்பினாள்.
“நீங்க இன்னும் தூங்கலையா?…” மாட்டிக்கொண்டோமே என விழிக்க,
“நீ ஏன் அழுத?…”என்றான் விடாப்பிடியாக.
சொன்னா திட்டுவானோ என்று பயந்த படி, “இல்ல அப்பாம்மா நியாபகம் வந்திருச்சு, அதான் இப்போ என்ன செய்யறாங்களோ? தெரியலை!…” என்றவள் திடீரென நியாபகம் வந்தவளாக,
“என்னங்க!…” என்று உதயாவை அழைக்கவும் அவனோ,
“ம்ம் என்னங்க, சொல்லுங்க!…” என்றான் நக்கலாக. அவளோ அதை கண்டுகொள்ளாமல்,
“உங்க அட்ரெஸ் எங்கப்பாக்கு தெரியுமா?…” என கேட்கவும் படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்து வயிற்றை பிடித்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இப்டி சிரிக்காங்க?…” என அவளது முகமே வாடிவிட்டது.
“நல்ல நேரம் பார்த்துதான் கேட்ட போ!..”என்று அடக்கமாட்டாமல் இன்னும் சிரித்தபடியே சொன்னவன் அவளது முகத்தை பார்த்து சிரிப்பை கைவிட்டவனாக,
“நல்லாவே தெரியும். உன் அப்பாக்கு நான் யாரு? எந்த ஊரு? நம்ம குடும்பம் எல்லாமே நல்லா தெரியும்!…” என அவளுக்கு வேண்டிய தகவலை சொல்லி அவளுக்கு நிம்மதியளித்தவன்,
“உன் வீட்ல உன் கிட்ட எதுவுமே ஷேர் பண்ணிக்க மாட்டாங்களா?…”
“ம்ஹூம்!..” என்றாள் இன்னமும் வாட்டம் குறையாமல்.
“இன்னொரு விஷயம் சொல்லவா?…”
விழி உயர்த்தி பார்த்தவளிடம், “என் மொபைல் நம்பரை உன் ப்ரெண்ட் கிட்ட குடுத்திட்டுதான் வந்திருக்கேன், நீ வேணா பாரு அவனே போன் பண்ணுவான் நாளைக்கு!…” என்று சொல்லவுமே முகம் பூவாக மலர்ந்து விகசித்தது.
“நிஜமாவா? விஜி போன் பண்ணுவானா?…” என ஆர்வமாக கேட்டவளிடம் ஆமாமென தலையசைத்து விட்டு,
“அவன் பண்ணலைனா என்ன?, அங்க சூழ்நிலை எப்படி இருக்கோ?…. நாம கால் செய்து பேசலாம். நானும் அவன் நம்பர் வாங்கிட்டு வந்திருக்கேன்!…” என மேலும் அவளை குளிர்வித்தவன்,
“என்னை பற்றி தெரிஞ்சுக்கணும்னு உனக்கா தோணவே தோணாதா?” என்றவனின் குரலில் சிறு ஏக்கம் இழையோட.
“தெரிஞ்சுக்கனும்தான், ஓரளவு தெரியும். மிச்சத்தை நீங்களா சொன்னா கேட்டுப்பேன்!..” என அசடு வழிந்தவாறே சொல்லவும்,
அவளது தலையில் லேசாக ஒரு குட்டு வைத்து, “தெரிஞ்சிக்கிற லட்சணத்தை பாரு?” என புலம்பியவாறு.
“இப்போதைக்கு இந்த அளவுக்கு தெரிஞ்சுகிட்டதே போதும்!…”என கூறியவன்,
“என்னை பார்த்தா பாவமா இல்லையா?..”
“என்னாச்சுங்க?…”
“பின்ன மணியென்ன பாரு எனக்கு தூக்கம் அப்படி சொக்குதே. நீ தூங்கலைனா எனக்கும் தூங்க தோணாது!…”
“நீங்க தூங்குங்க, நானும் தூங்கிடுவேன்!…”
“இல்லை நீ தூங்கு பார்த்துட்டு நான் தூங்கறேன், உன்னை நம்ப முடியாது!..” எனவும் சட்டென படுத்து கண்ணை மூடிகொண்டாள்.
“என்னங்க நான் தூங்கிட்டேன், நீங்களும் தூங்குங்க!…”என்று கண்ணை மூடியவாறே கூறவும் அவளது சிறுபிள்ளைதனத்தில் சிரித்தபடி தானும் கண்ணயர்ந்தான்.
அலுப்போடு சேர்ந்த ஆழ்ந்த உறக்கம் இவர்களுக்காகவே காத்துகொண்டிருந்தது போல அவசரமாக அள்ளி அரவணைத்துகொண்டது.