நவராத்திரி

தன்னைப் போல் ஒரு சக்தியினை உருவாக்கி, தான் மட்டும் என்று இல்லாமல் தன்னில் இருந்து உதித்த சக்தியினைக் கொண்டு உலகத்தில் தர்மத்தை நிலைநாட்ட வேண்டும், தர்மம் வாழ உலகம் வாழ தன் குழந்தைகளை உருவாக்க வேண்டும் என ஸ்கந்த மாதாவாகப் போதிக்கின்றாள்.

தன்னில் இருந்து எழும் சக்தி நல்லவையாக இருத்தல் அவசியம். நல்ல பலன்களைத் தருதல் அவசியம். அதற்கு அன்னை அருள் வேண்டும் என்பதே இந்த நாளின் போதனை, ஸ்கந்தமாதா சொல்லும் தத்துவம்.

அன்னை யோக சக்கரத்தில் "விசுத்தி" எனும் சக்கரத்தின் இயங்கு சக்தியாகின்றாள்.

இது அனாதக தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை உயரத்தில் இந்தச் சக்கரம் அமைந்துள்ளது, கழுத்தின் அடிபாகத்தில் அமைந்துள்ளது.

கழுத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் காற்று தத்துவத்தின் உச்ச சக்கரமாகும், இதன் தாத்பரியம் முக்கியமானது.

இதுதான் தலைக்கும் உடலுக்குமான இணைப்பினைக் கொடுக்கும். அதாவது, தலை என்பது கட்டுப்பாடு கொண்ட இடம், மூளை உள்ளிட்ட கட்டளைகள் உருவாகும் இடம், முழுக்கட்டுப்பாடு இருக்கும் இடம் அதுதான்
தலைக்கு ஒன்று என்றால் உடல் இயங்காமல் போவதும் அப்படித்தான், உடல் என்பது செயல்படும் எந்திரம், எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் நடக்கும்.

ஆக, இயக்கும் இடத்தையும் இயங்கும் சக்தியும் ஒன்றாகச் சேரும் இடம் கழுத்து, இதுதான் இயக்குச் சக்தியினை இயங்கு சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்து இணைக்கின்றது.

இந்த இணைப்பை கொடுப்பதுதான் விசுத்தி.

இந்த விசுத்தி இருக்குமிடத்தில்தான் குரல்வளை, மூச்சுக் குழாய், தைராய்டு சுரப்பிகள் எனப் பல முக்கிய பாகங்கள் வரும்.

இந்தச் சக்கரம் சரியாகத் துலங்கினால் கழுத்துச் சார்பான உடலியல் நோய் வராது, குரல் சிக்கல் தைராய்டு பிரச்சினை, மூச்சுக்குழாய் சிக்கல், உணவுக் குழாய் என இன்னும் பல நுணுக்கமான சிக்கலெல்லாம் வராது. எல்லா இயக்கமும் சரியாக நடக்கும்.

இந்தச் சக்கரம் மங்கிவிட்டால் மேற்சொன்ன நோய்களெல்லாம் வரும், இன்னும் கழுத்து வலி மற்றும் இறுக்கம்
தொண்டை வலி மற்றும் இறுக்கம், தொண்டை சார்ந்த பிரச்சினைகள், சீரற்ற தைராய்டு செயல்பாடு
இரத்த சோகை, பல் சார்ந்த பிரச்சினைகள், காது சார்ந்த கோளாறுகள், வாய்ப் புண், உடல் சோர்வு, தலைவலி, முதுகுத்தண்டு கோளாறுகள்.

இதனால் இந்த இணைப்புச் சக்கரம், எல்லாப் பாகங்களையும் இணைக்கும். இந்தச் சக்கரம் அதிமுக்கியம்.

இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனநலம் சரியாக இருக்கும். அப்போது நேர்மையான, வெளிப்படையாகப் பேசும் தன்மை, பிறரின் பேச்சை கவனமுடன் கேட்கும் தன்மை, பிறருடன் இயல்பாகக் கலந்து பழகும் தன்மை நன்றாகப் பாடுதல், கலைபடைப்புக்களைக் கொடுத்தல் போன்ற கலைத் திறன்கள்,படைப்பாற்றல்
தன்னம்பிக்கை, அமைதியான மனநிலை ஆகியன வரும்.

கலைஞர்கள், பாடகர்கள் இன்னும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள், இசை அமைப்பாளர்கள் எனப் பெரும் பெரும் கலைஞர்களுக்கெல்லாம் இச்சக்கரம் சரியாகத் துலங்கியிருக்கும்.

உண்மையில் இந்துக்களின் ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களைத் துலக்கும் உத்திகள்.

அவ்வகையில் ஐந்தாம் ஸ்வரம் தாண்டி யாரும் அதிகம் பாடுவதில்லை, ஐந்தாம் ஸ்வரத்துகான பலன் இச்சக்கரம் துலங்குவது, மேற்கொண்டு பாடிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஏழு சக்கரமும் துலங்கும்.

நாயன்மார் பாடினார்கள், ஆழ்வார்கள் பாடினார்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடினார்கள், எல்லோரும் பாடி இறைவனை அடைந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏழு ஸ்வரங்களைப் பாட பாட ஏழு சக்கரமும் சரியாகும் அந்நிலையில் இறைநிலை எளிதில் வாய்க்கும்.

இசை இறைவனையே வசப்படுத்தும் என்பது இந்தச் சூட்சுமமே.

இந்தச் சக்கரம் சரியில்லை என்றால் கூச்சம், படைப்புத் திறன் முடங்கியிருத்தல், பிறருடன் பேச, பழக அச்சப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பேசுதல், கேலிக்கு ஆளாவோம் என்ற பயத்தில் மனதில் இருப்பதைப் பேசாதிருத்தல், உபயோகமற்ற பேச்சு பேசுதல், பிறர் பேசுவதைச் சரியாக கவனிக்காதிருத்தல்
பொது மேடைகளில் பேசத் தயங்குதல், சமூக தொடர்புகளைத் தவிர்த்தல், நினைப்பதை வெளிப்படுத்த இயலாமை,பொய் பேசுதல், பதட்டம், பிடிவாதம், பாதுகாப்பற்று இருப்பதாக உணர்தல், கவனக் குறைபாடு ஆகிய குறைகள் வரும். இது ஒரு மனிதனை முழுக்க முடக்கும்.

ஒரு மனிதன் எவ்வளவு பெரும் திறமையானவனாக அறிவாளியாக பெரும் ஞானம் கொண்டவனாக இருந்தாலும் சரியாக அதை வெளிபடுத்தாவிட்டால் பலனில்லை.

அந்த வெளிபடுத்தும் கலை, அது பேச்சு, பாடல், எழுத்து, ஓவியம் என எவ்வகையிலாவது ஒருவன் தன்னை வெளிப்படுத்தும் அந்த நல்ல தன்மையினை இந்தச் சக்கரம் தரும்.

விசுத்தி என்றால் சுத்தமான எனப் பொருள், யாரால் தன்னை அச்சமின்றி கொஞ்சமும் தயக்கமுமின்றி வெளிப்படுத்தமுடியும் என்றால் தன்னிடம் உண்மையும் சத்தியமும் இருப்பவன் அதனை வெளிப்படுத்துவான்.
யார் தன்னை வெளிப்படுத்தமுடியும் என்றால் மனம் முழுக்க நல்ல விஷயம் கொண்டவன், யாரும் குற்றம் சொல்லமுடியாதவன் தன்னை வெளிப்படுத்துவான்.

அந்த நல்லமுறையில் ஒருவன் தன்னை உலகுக்குக் காட்டிப் பல நல்ல விஷயங்களைச் சொல்ல இந்தச் சக்கரம் துலங்குதல் அவசியம்.

இந்தச் சக்கரம்தான் ஒருவனுக்கும் உலகுக்கும் தொடர்பைக் கொடுக்கும், உலகுக்கு அவனால் பல நல்ல விஷயங்களைக் கொடுக்கும்.

அது பேச்சு, எழுத்து, போதனை, பாடல் என ஏதோ ஒருவழியில் அவனை இயங்கவைக்கும்.
இந்தச் சக்கரத்தால்தான் நமக்கு வேதங்கள், உபநிடதங்கள், புராணம், கீதை, அழியா நூல்கள், பாடல்கள், இசைகோர்வைகள் என எல்லாமும் கிடைத்தன‌.

இந்தச் சக்கரமே ஒருவனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும், அழியா புகழ்பெற்றவர்கள் பெரும் அடையாளம் பெற்றவர்களெல்லாம் இச்சக்கரம் துலங்கியவர்களே.

யாரின் குரலுக்கு ஒரு மதிப்பு உண்டோ, யார் குரலுக்கு உலகம் செவிமடுக்குமோ, எந்தக் குரல் சமூகத்தை உலுக்குமோ, யார் குரலுக்குச் சமூகம் மகுடிக்குட்பட்ட பாம்பாக மயங்கி கிடக்குமோ அவர்களெல்லாம் இச்சக்கரம் தூண்டப்பெற்றவர்கள்.

அச்சக்கரமில்லாமல் தலையும் உடலும் இணையாது என்பது போல பிரபஞ்சத்தினை ஆளும் ஈர்க்கும் ஒரு சக்தி ஒருவனுக்கு கிடைக்கும். அது அவன் திறனை ஆற்றலை பிறர் வசீகரிக்கும் அளவில் வெளிப்படுத்தும்.

வியாபாரம் மட்டுமல்ல ஒவ்வொருவனின் வார்த்தையிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் விஷயத்திலும் அழகுணர்ச்சி வசீகர தன்மை உண்மை அழகு என எல்லாமே அவசியம்.

ஒரு ஈர்ப்பினை அது கொடுத்தல் வேண்டும்.

எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள், பாடுவார்கள் ஆனால் எல்லோரும் உச்சம் தொடமுடியுமா பெரும் மக்களை ஈர்க்கமுடியுமா என்றால் முடியாது.

அதற்கு ஒரு பிரபஞ்ச சக்தி அவனில் இயங்கவேண்டும். அதுதான் அவனை இந்த உலகில் தனித்துக் காட்டும் சக்திவாய்ந்தவனாக காட்டும். பெரும் பெரும் ஆற்றலை அழியா இடத்தை அவனுக்கு கொடுக்கும்.

வியாசர் முதல் தேவாரம் பாடியவர்கள் வரை, சங்கீத மும்மூர்த்திகள் வரை, காஞ்சி மகாபெரியவர் வரை இப்படித்தான் பெரும் இடம் பெற்றார்கள்.

முருகப்பெருமான் மதுரை தமிழ்சங்கத்துக்கு தலைவராய் இருந்த இரகசியம் இதுதான், ஸ்கந்தன் போல ஒவ்வொருவருக்கும் அன்னை அருள் கிடைக்கும் என்பது.

முருகப்பெருமானை வணங்கினால் அன்னையின் அருளும் உண்டு என்பது, அங்கே கலைகள் செழிக்கும் என்பது தமிழ்சங்கத்தின் அடிநாத தத்துவம்.

அன்னை மீனாட்சி ஆலயத்தில் முருகப்பெருமான் தலைமையில் தமிழ்ச்சங்கம் நடந்ததும், ஒளவை முதல் ஏகப்பட்ட புலவர்களுக்கு முருகப்பெருமான் அருளாசிக் கொடுத்து வந்ததும் அவர்கள் அன்று முதல் கிருபானந்தவாரியார் வரை தனி சொல்வாக்கு கொண்டு நின்றதும் இந்தத் தத்துவமே.

அன்னை சொல்வாக்கை செல்வாக்கை கலைகளை அருள்வாள் என்பது, குமரகுருபரர் வாழ்வில் நடந்த எல்லாமும் ஸ்கந்தமாதா அருளே.

ஸ்ரீ சக்கரத்தில் ஐந்தாவது ஆவரணத்தின் பெயர் ‘சர்வார்த்த சாதக சக்கரம்’ என்பது. இதில் மேலும் கீழும் நோக்கிய நிலையில் பத்து முக்கோணங்கள் உள்ளன, இங்குள்ள பத்து சக்தி தேவதைகள் சர்வசித்திப்ரதா, சர்வசம்பத்ப்ரதா, சர்வப்ரியங்கரி, சர்வமங்கள காரிணி, சர்வகாமப்ரதா, சர்வதுக்க விமோசனி, சர்வம்ருத்யுப்ரசமனீ , சர்வவிக்ன நிவாரணி, சர்வாங்கசுந்தரி, சர்வ சௌபாக்யதாயினி என்பவர்கள்.

மையப் பகுதியில் இருந்து கீழ் நோக்கி உள்ள ஐந்து கோணங்கள் சரஸ்வதி, லஷ்மி, கெளரி, மகேஸ்வரி மற்றும் மனோன்மணி போன்ற தெய்வங்களையும், மேல் நோக்கி காணப்படும் நான்கு கோணங்கள் சிவ பெருமானின் நான்கு முகங்களான தத்புருஷம், சத்யோஜாதம், அகோரம், வாம தேவம் மற்றும் மறைந்திருக்கும் ஈசானம் எனும் சக்தியையும் சேர்த்து ஐந்து சக்திகளையும் நான்கு கோணங்களில் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகின்றது.

"சர்வார்த்த சாதக சக்கரம்" என இதற்குப் பெயர்.

இந்தச் சக்கர தத்துவம் இந்த யந்திரபடி சிவனும் சக்தியும் சேர்ந்து ஆறுமுகம் கொண்ட சக்தி ஒன்றை உருவாக்கும் என்பது, அதுதான் ஸ்கந்த மாதா தத்துவம்.

ஆளும் தன்மை, கீர்த்தி, செல்வம், வைராக்கியம், மோக்ஷம், ஐஸ்வர்யம் எனும் ஆறு பகங்களுக்கு இவளே அதிபதி எனவே இவள் பகவதி என்றும் வணங்கப்படுகிறாள்.

சாருரூபா, மஹாலாவண்ய சேவதி, கோமளாகாரா, காந்திமதி, சோபனா, திவ்யவிக்ரஹா, கோமளாங்கீ போன்ற நாமங்கள் தேவியின் தோற்றப் பொலிவை எடுத்துக் கூறுகின்றன.

கோமளாகாரா எனில் பேரழகே வடிவெடுத்தவள் என்று பொருள்.

தச மகாவித்தியா இந்த ஸ்ரீ புவனேஸ்வரி மகாவித்யாவாகப் போற்றுவர்.

விச்வஸ்ய பீஜம் பரமாஸி மாயா என்று, இந்த தேவியை உலகின் விதையாகப் போற்றுகிறது விமகாத்மியம்.

"வாஞ்சிதார்த்த ப்ரதாயினீ க்ஷிப்ர ப்ரஸாதினீ’ என்றபடி, வேண்டி யவற்றை வேண்டியபடி அளிக்கவும், குறிப்பிட்ட காலத்தில் அருளவும் ஆற்றல் பெற்றவள் தேவி ஒருவளே. அந்த அன்னையை வழிபடுபவர்கள் சொற்செல்வம், கவித்துவம், ஸர்வ வசியம், இராஜ்ய லாபம், சூரியனைப் போன்ற காந்தி பெற்றவர்களாகவும் விளங்குவர் என்பது பொருள்.

"சப்தாத்மிகா" அதாவது, நாம் சொல்லும் அனைத்து சொற்களும் அவளே என்கின்றன சாக்த தந்திரங்கள். இன்னும் ஆழமாக ஒரு தத்துவத்தைப் பார்க்கலாம், அதுதான் முருகப்பெருமானின் தாத்பரியம்.

அன்னையில் இருந்து உதித்தவள் கௌமாரி, அவள்தான் கௌமாரன் எனும் முருகப்பெருமானின் மகா சக்தி.

அந்தக் கௌமாரி அழகு, அறிவு, வீரம் போன்றவற்றின் உறைவிடமான குமரக்கடவுளின் அம்சம். பக்தர்களின் விருப்பங்களைத் தட்டாமல் நிறைவேற்றுபவள். இந்த அம்பிகை ஆறுமுகங்கள் கொண்டவள். பன்னிரு கண்களும், கரங்களும் கொண்டவள்.

மயில் வாகனத்தில் அமர்ந்து அருள்பவள். வில், அம்பு, பாசம், அங்குசம், பரசு, தண்டம், தாமரை, வேல், கத்தி, கேடயம், அபயம், வரதம் தரித்தவள். அடியார்க்கு வரங்களை வாரி வழங்குவதால் சிவந்த கரங்களைக் கொண்டவள்.

விஷ்ணு தர்மோத்திரம் என்ற நூலில் இந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆம். வானலோக சேனாதிபதியாக விளங்கும் முருகப்பெருமானின் வீரத்திற்குக் காரணமே கௌமாரிதான்.

ஸ்கந்தனுக்கு எல்லா வகையிலும் அவளே பலம், இந்த அன்னையினை வழிபட வேண்டிய நாள் இது(ஐந்தாம் நாள்). இந்த நவராத்திரியின் பஞ்சமி நாளில் அவளை நினைந்து வழிபட்டால் செல்வாக்கு சொல்வாக்கு நிறைந்த கலைகள் என எல்லா ஞானமும் ஆற்றலும் அவள் தருவாள்.

அன்னையினை வெண்ணிற மேடை அமைத்து வழிபடுதல் நன்று, பட்டாணி சுண்டல் பருப்பு பாயாசம் அவளுக்கு ஏற்றது, கதம்ப சாதம் அவளுக்கான பிரசாதம்.

இன்றைய நாளில் குலப்பெண்கள் அவளிடம் பெற வேண்டிய வரமும் கற்கவேண்டிய பாடமும் ஒன்றுதான், அது ஸ்கந்தனை அன்னை பெற்று வளர்த்தாள் என்பதிலும் விசுத்தி சக்கர தத்துவத்திலுமே அடங்கிவிடுகின்றது.

"வாகீஸ்வரி" என வாக்குக்கு அதிபதியாக அன்னையினைச் சொல்வதில் தெளிவாகின்றது.
 
தன்னில் இருந்து வெளிப்படும் விஷயம் ஞானமாக எல்லோருக்கும் பயனுள்ளதாக இருத்தல் அவசியம் என்பது அன்னை ஸ்கந்த மாதாவின் தாத்பரியம், அந்த வரத்தை அவளிடம் நாடி வாங்கும் நாள் இது.

முருகப்பெருமானை எப்படி அன்னை ஞானமும் அறிவும் தெளிவும் கொண்டவனாக வளர்த்து உலகம் காத்தாளோ அப்படி ஒவ்வொரு தாயும் தன் மகனை ஞானத்தில் வளர்த்து அறிவில் சிறக்கவைத்து வளர்க்க வேண்டும் என்பது குடும்பப் பெண்கள் இன்று அடையவேண்டிய வரம், அவர்களின் வேண்டுதல் அதுவாக இருத்தல் அவசியம்.

அன்னை தன்னை அண்டியவர்களைத் தன் அருளால் தனக்குரிய மகன்களாக்கினாள், முருகனை அவள் பெற்று வளர்த்தாள் என்பது மட்டுமல்ல விஷயம்.

அவள் காளிதாசன், கம்பன், இன்னும் எத்தனையோ பேரை குமரகுருபரர் வரை தன் ஞானமகன்களாக்கி அருள் கொடுத்து அழியாக் காவியமாக்கினாள்.

அபிராமி பட்டர் முதல் எவ்வளவோ பேரைச் சொல்லமுடியும்.

எத்தனையோ மகான்களை அவள் ஆட்கொண்டு தன் மகன்கள் என அடையாளமிட்டாள். சுவாமி இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் அவ்வகை.

விஞ்ஞான காலத்தில் சீனிவாச ராமானுஜம் அவளின் மகனாக நின்றார்.

அவள் அன்று முருகப்பெருமானை மட்டுமல்ல அன்று ஜடாவர்ம சுந்தரபாண்டியன் என உருவாக்கியவள், பின்னாளில் நாயக்க மன்னர்கள், வீரசிவாஜி எனும் மாவீரனை உருவாக்கி இந்துதேசம் காத்தாள்.

யார் தன்னை முழுக்க அண்டினாலும் அவர்களைத் தாயன்போடு வாரியெடுத்து அவர்களை தன் மகனாக்கி தன் மகளாக்கி அவர்களுக்கு எல்லாச் சக்தியும் அள்ளிக்கொடுக்க அவள் காத்துக் கொண்டிருக்கின்றாள்.

ஒவ்வொருவரையும் தன் பிள்ளைகளாக அருள் வழங்க அவள் துடித்துக் கொண்டிருக்கின்றாள்.

அவளை நாடி அவரின் பிள்ளைகாக அவள் கரங்களில் ஒடுங்குவோருக்கு, அவளிடம் அடைக்கலமாகி கைஏந்தி நிற்போருக்கு அவள் எல்லா வரத்தையும் தாயாக நின்று தருகின்றாள், இந்த ஜென்மத்தில் இல்லாவிட்டால் அடுத்த ஜென்மத்தில் தேடிவந்து தராமல் அவள் செல்வதில்லை.

அந்த ஸ்கந்தமதா முருகனுக்கு மட்டும் அன்னை அல்ல, எல்லா உயிர்க்கும் அவளே தாய், அவளை வேண்டி எல்லா வரங்களையும் அடையலாம், அன்பும் கருணையும் கொண்ட அவள் அதை நிரம்ப தருவாள்.

அதை பெற்றுகொள்ளும் நாள் இது.

அவளுக்கான மந்திரம் இதோ

"சின்ஹாசன் கட நித்யம் பத்மஸ்ரித் கர்தவ்ய
சுபதஸ்து சதா தேவி ஸ்கந்த மாதா யஷஷ்வினி"

”தன் இருகரங்களில் தாமரை மலர் ஏந்தியவளும், சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பவளும், ஸ்கந்தனின் தாயாகவும் இருக்கும் தேவி துர்க்கையை நான் வணங்குகின்றேன்."
 
Back
Top
Developed and maintained by – Akeshya